இலங்கை கடற்படையினரின் சிறை பிடித்தலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரம் அருகே கொட்டும் மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அடையாள உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு மாதத்தில் அந்நாட்டு கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி 6 வெவ்வேறு இடங்களில் 78 தமிழக மீனவர்களையும், 38 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, நீர் கொழும்பு ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம், தூத்துக்குடி மீனவர்கள் துறைமுகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத் தினர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகு மீனவ சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட் டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை (அக்.24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவதாக வும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
அதன்படி தங்கச்சி மடத்தில் திரளான பெண்கள், குழந் தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
மத்திய அரசு மெத்தனம்: டி.ராஜா
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்குள்ளாகும் மீனவர்கள் இந்தியக் குடிமக்கள். எனவே அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நிலைநிறுத்த கச்சத்தீவு உடன்படிக்கையை மறுசீராய்வு செய்ய வேண்டும். இதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்தால் கச்சதீவை திரும்பப் பெற வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. நான் டெல்லி சென்றதும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துவேன். மேலும் நவம்பரில் கூட இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினையை எழுப்புவேன் என்றார்.