டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களைப் பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் புகார்; உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: தினகரன்

செய்திப்பிரிவு

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களைப் பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (நவ.20) தன் ட்விட்டர் பக்கத்தில், "தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களைப் பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க கேமராக்கள் பொருத்துவதில் முறைகேடுகள் நடந்தால் அது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

எனவே, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிக்கு ரூ.25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, ரூ.900 கோடியாக உயர்ந்தது எப்படி? டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன்? யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன ?

முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு இதில் பங்கு இருக்கிறதா? இதன் மூலம் மிகப்பெரிய தொகையான ரூ.900 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் யாருக்குச் செல்கிறது என்பன போன்ற மக்களின் சந்தேகங்களுக்கு விடை காண வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT