கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, லஷ்மி விலாஸ் வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் 94 வருடங்களாகச் செயல்பட்டு வரும் லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு நவ.17 முதல் வர்த்தகத் தடையை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கியின் நிதி நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மோசமான சரிவினால்தான் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் பத்திரிகைச் செய்தி தெரிவித்துள்ளது.
வங்கியின் வாடிக்கையாளர்கள் யாவரும் தங்கள் கணக்கிலிருந்து டிச.16, 2020 வரை அதிகபட்சமாக ரூ.25,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது. லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடு மற்றும் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரைமுறையற்று கடன் வழங்கியதும், அதைக் கறாராக வசூலிக்கத் தவறியதும்தான் இந்த வங்கியின் சீரழிவுக்கு முக்கியமான காரணமாகும். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடியாகத் தலையிட்டு அதனைச் சரிசெய்ய முயலவில்லை. இதன் காரணமாக வங்கியிலுள்ள பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
யெஸ் வங்கி (YES) என்ற தனியார் வங்கியும், டிஎச்எப்எல், ஐஎல்&எப்எஸ் ( DHFL, IL&FS) போன்ற வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சூழ்நிலையில், எல்விபி வங்கியை வெளிநாட்டு தனியார் வங்கியுடன் இணைப்பதற்கான மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முயற்சி தவறான போக்காகும். 33 கிளைகளுடன் இயங்கிவரும் (DBS) டிபிஎஸ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியை எடுத்துக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படாது.
சுமார் 60% கிளைகளைக் கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கொண்டுள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே எல்விபி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
எனவே இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது:
* லஷ்மி விலாஸ் வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்.
* கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தொகையைக் கறாராக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் ((wilful defaulters) மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* லஷ்மி விலாஸ் வங்கியைப் பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதால் பொதுத்துறை வங்கிக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும்.
* லஷ்மி விலாஸ் வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
* இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தனியார் வங்கிகளையும் உடனடியாகப் பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும்”.
இவ்வாறு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.