திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கிறிஸ்துதாஸ் காந்தி, பேராசிரியர் அரங்க மல்லிகா, சங்கர்ராஜ், பரதன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்களை ஸ்டாலினிடம் அவர்கள் அளித்தனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் திமுக மாவட்ட,ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலர்கள், பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று சென்னை மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, பகுதி,வட்டச் செயலர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். வாக்குச்சாவடி குழு அமைப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.
234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்டச் செயலர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாக திமுக தலைமைஅலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.