மதுராந்தகம் அருகே வில்லவராய நல்லூரில் அரசு சேமிப்புகிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் செங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்தமாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்படும் நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க பாலித்தீனால் செய்யப்பட்ட மூடு உறைகளை (படுதாக்களை) மட்டுமே பயன்படுத்தி மூடி வைப்பர். கடந்த வாரம் சேகரித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சரிவர மூடி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் அதிக மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகின. 20 ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் மழையில் நனைந்து பாழானதாக இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற திறந்த வெளிக் கிடங்குகளில் நெல்லை பாதுகாக்க போதிய தரமான மூடு உறைகளை வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை மழையில் இருந்து பாதுகாக்க வசதியாக தகரம் மற்றும் ஓடுகள் வேய்ந்த கட்டிடங்களையாவது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.