தற்போது அதிக அடர்த்தியில் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிகால்களில் செல்வது சிரமமாக உள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை துரைச்சாமி நகர், வானமாமலை நகர், சொக்கலிங்க நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் பெய்து வரும் மழையால் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் மூலம் புதிய சாலைகள் உயரமாக போடப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள் தாழ்வாக உள்ளன.
வானமாமலை நகர், துரைச்சாமி நகர், வேலுச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகள் தாழ்வாக உள்ளன. தற் போது அதிக அடர்த்தியில் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிகால்களில் செல்வது சிரமமாக உள்ளது.
எனவே இப்பகு தியில் ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு கிணறுகளை அமைத்து மழை நீரை சேகரித்து மோட்டார் மூலம் பம்ப் செய்து அருகில் உள்ள மழை நீர் வாய்க்காலில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நிதி மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து உடனடியாக வழங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணை யாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.