மதுரையில் ஜவுளிக்கடை தீ விபத்தில் தீயணைக்கும் முயற்சியில் உயிரிழந்த வீரர்கள் இருவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்ட கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் சிக்கிப் படுகாயம் அடைந்தனர். இதில் சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:
“மதுரை தெற்கு மாசி வீதியில் இருக்கும் ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது - திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பேரதிர்ச்சிக்கும் பெருந்துயரத்திற்கும் உள்ளானேன்.
இருவரது மரணத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிர்த் தியாகம் செய்துள்ள அந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தீயணைப்பு வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இதுபோன்ற தீயணைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இரு தீயணைப்பு வீரர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சக வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.