ரயில் புறப்படும் நேரம் குறிப்பிடாமல் விநியோகிக்கப்படும் டிக்கெட். 
தமிழகம்

சிறப்பு ரயில் டிக்கெட்டுகளில் புறப்படும் நேரம் குறிப்பிடாததால் பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை-கோவை இடையே 5 சிறப்பு ரயில்களும், கோவை வழியாக சென்னைக்கு 2 ரயில்களும், மயிலாடுதுறை, பெங்களூருக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுவதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் படுகின்றனர். கரோனா காரணமாக ரயில்களில் இயல்பைவிட கூட்டம்குறைவாக இருப்பதால் தீபாவளிக் கென நடப்பாண்டு சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

இருப்பி னும், தற்போது இயக்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் புறப்படும் நேரத்தை பயணச்சீட்டில் குறிப்பிடாததால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “தொழில்நுட்ப வசதியை எளிதாக கையாளும் பயணிகள், அடிக்கடி ரயில்களில் பயணிப்போர் ரயில்வே செயலி, இணையதளம் மூலம் ரயில் புறப்படும் நேரத்தை அறிந்துகொள்கின்றனர். ஆனால், இவற்றை கையாள தெரியாதவர்களுக்கு டிக்கெட்டில் புறப்படும் நேரம் இல்லாதது குழப் பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, டிக்கெட்டில் ரயில் புறப்படும் நேரத்தை அச்சிட வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “தற்போது இயக்கப்பட்டுவரும் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்கள் என்பதால் அவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம்.

எனவேதான், நேரம் குறிப்பிடப்படவில்லை. டிக்கெட்டில் நேரம் குறிப்பிடுவதற்கு பதில் பயணிகளே நேரத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ரயில்கள் புறப்படும் நேரம், ரயில்கள் ரத்து, மாற்றுவழியில் செல்வது, புறப்படும் நேரத்தில் மாற்றம் போன்ற விவரங்களை ரயில்வேயின் ‘National Train Enquiry System Android App-NTES’ என்ற செல்போன் செயலி மூலம் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி உள்ளது. மேலும், 3 மணி நேரத்துக்கு மேல் ரயில்கள் புறப்படும் நேரத்தில் தாமதம் அல்லது ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து பயணிகள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். ரயில் நிலைய தகவல் மையத்திலும் பயணிகள் நேரில் விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT