தமிழகம்

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் நூல் நீக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் நூல் நீக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாட திட்டத்தில் மூன்றாண்டுகளாக இருந்துவந்த எழுத்தாளர் அருந்ததி ராயின் வாக்கிங் வித் த காம்ரேட்ஸ் (Walking with the comrades) என்ற புத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான அறிவிப்பு கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே நடைமுறையிலுள்ள ஒரு பாடதிட்டத்தை அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்து மாற்றுவது அழகல்ல. பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றால் அது குறித்து சம்பந்தப்பட்ட பாடக்குழுவில் (Board of studies) விவாதித்து முடிவெடுத்து, அம்முடிவு கல்வி நிலைக்குழுவில் (Standing committee on academic affairs) உறுதி செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்ட நடைமுறை. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தரோ இவ்வவிதிகளை மீறி ஏபிவிபி மாணவர் அமைப்பிற்கு அடிபணிந்து பாடதிட்டக்குழு, கல்விக்குழு, ஆட்சிக்குழு என்று எந்த சட்டபூர்வ அமைப்பிலும் விவாதிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். துணைவேந்தர் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT