தமிழகம்

ஆபாசத்தைப் பரப்பும் விளம்பரங்களை ஒளிபரப்ப உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கி.மகாராஜன்

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களை ஒளிபரப்பு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தொலைக்காட்சிகளில் கருத்தடை சாதனங்கள், பாலியல் மருத்துவம் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாக உள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு தணிக்கையில்லை.

இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதுடன், வளர் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழல் உள்ளது. இதுதவிர உள்ளாடைகள், சோப், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் தொடர்பான விளம்பரங்களிலும் பெண்கள் ஆபாசமாக காண்பிக்கப்படுகின்றனர்.

எனவே, தொலைக்காட்சி விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்தவும், அதுவரை ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்து, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் மருந்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT