தமிழகம்

நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் ஒருபகுதியாக சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உள்பிரகார வலம் நடைபெற்று வந்தது.

விழாவின் 11-ம் நாளான நேற்று டவுன் கம்பாநதி காமாட்சியம்மன் கோயில் அருகே பேட்டை சாலையில் உள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி சந்நிதியில் நெல்லையப்பருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி நெல்லையப்பர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நெல்லையப்பருக்கு பாதபூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருக்கோயில் செயல் அலுவலர் ராம்ராஜ் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர். கோயில் இணையதளம் மூலம் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

காலை 6 மணிக்குப்பின் கோயிலுக்குள் சுவாமி, அம்பாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அதிமுக, மதிமுக, இந்துமுன்னணி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT