கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும் மற்றும் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் செயல்பட்டுகள் குறித்தும் மாவட்ட உயர் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
முன்னதாக நிகழ்ச்சியில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, போக்குவரத்துத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.28.74 கோடி மதிப்பிலான 30 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். மேலும் பொதுப்பணித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.