பிஹார் தேர்தல் காரணமாக தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்து இருக்கலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பிஹார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். ஏன் ஸ்டாலினே கூட மதுரைக்கு வரவே பயப்பட்டார்.
பிஹாரில் தேர்தல் காரணமாக இங்கே வெங்காயம் கொண்டு வர முடியவில்லை. அதனாலேயே தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு, திமுக ஆட்சி காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறைத் தேர்தலை அதிமுக ஆட்சியில் 2 முறை நடத்தி முடித்து உள்ளோம்.
திமுக ஆட்சிக் காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அதிமுக அரசின் வளர்ச்சித் திட்டங்களை நேரில் பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார், ’’ என்றார்.