பாம்பன் கடலில் கட்டப்பட்டுவரும் புதிய ரயில் பாலப் பணிகளில் பயன்படுத்தப்படும் மிதவைகள் தொடர்ந்து கடல் சீற்றத்தினால் ரயில் பாலத்தில் மோதிவதால் ராமேசுவரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 106 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் ராமேசுவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்குப்பட்டுள்ள தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளதால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டு ராமேசுவரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் பாம்பன் கடலின் மீது இரு வழி பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது.
கரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்ட பணிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.
தற்போது பழைய பாலத்திற்கு அருகிலேயே கடலில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் பாம்பன் வடக்கு கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது.
பாம்பன் வடக்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மிதவைகள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும், மிதவைகள் மூழ்கும் சம்பவங்களும் அவ்வப்போது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இந்த கடல் சீற்றத்தினால் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன், கலவை எந்திரம், துளைப்பான்களுடன்கூடிய மிதவைகள் பாம்பன் வடகடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
திங்கட்கிழமை இரவு கடல் சீற்றத்தினால் வடகடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களுக்கு இடையில் சிக்கியது.
இந்த விபத்தை தொடர்ந்து திங்கட்கிழமை ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு 210 பயணிகளுடன் புறப்பட்ட சேது விரைவு ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து ராமேசுவரம் வந்த சேது விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களில் சிக்கிய மிதவையை மீட்கும் பணி செவ்வாய்கிழமையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.