தமிழகம்

நடிகர் சூரி புகார் மீதான வழக்கு: விஷ்ணு விஷாலின் தந்தை முன்ஜாமீன் மனு வாபஸ்

செய்திப்பிரிவு

கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில், தான் கைது செய்யப்படாமல் இருக்க விஷ்ணு விஷாலின் தந்தை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இருந்தார். இந்நிலையில், அம்மனுவை திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் 'வீர தீர சூரன்' என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.

அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சம்பளம் தராததால் அதுகுறித்து சூரி கேட்டபோது, அவர் நிலம் வாங்கும் எண்ணத்தில் இருப்பதால் அவருக்கு நிலம் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்து நிலத்துக்கான அட்வான்ஸாக சம்பளப் பணத்தைக் கழித்துள்ளனர்.

பின்னர் நிலத்தைக் காட்டி மேலும் சில கோடிகளைக் கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாகத் தெரிகிறது.

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ரூ.3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.

நிலம் வாங்கும்போதே பல பிரச்சினைகள் இருப்பது நடிகர் சூரிக்குத் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தைத் திருப்பி வாங்கிக் கொள்வதாகவும் பணத்தைத் திருப்பித் தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாகத் தெரிகிறது.

ஆனால், சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், மீதித் தொகையான 2 கோடியே 70 லட்ச ரூபாயை சூரிக்குத் தராமல் அலைக்கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அடையாறு போலீஸில் புகார் அளித்த நடிகர் சூரி, புகார் மீது நடவடிக்கை வராததால் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நடிகர் சூரி வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கடந்த மாதம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நவம்பர் 5-ம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பரிந்துரை செய்வதாகவும் இது தொடர்பாகப் பதிவுத்துறைக்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, அவர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பின்னர் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன்ஜாமீன் மனு தொடர்பாக நவம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடும்படி அன்புவேல்ராஜன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

சூரி தரப்பிடம் நீதிபதி, “இந்த வழக்கில் பணம் திருப்பிக் கொடுத்தால் போதுமா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பணம் திரும்பக் கிடைத்தால் போதும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நவ 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT