புதுச்சேரியில் இன்று புதிதாக 95 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ. 8 ) கூறும்போது, "புதுச்சேரியில் 3,880 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-69, காரைக்கால்-5, ஏனாம்-5, மாஹே-16 என மொத்தம் 95 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இன்று யாரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை 601 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 838 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 758 பேர் வீடுகளிலும், 412 பேர் மருத்துவமனையிலும் என மொத்தம் 1,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 136 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,067 (95.06 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 714 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 971 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
புதுச்சேரி மாநில மக்கள் அரசு சொல்லும் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். அவ்வாறு கடைப்பிடித்தால் கரோனா பாதிப்பு இருக்காது. வரும் வாரம் நமக்கு தீபாவளிப் பண்டிகை என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.