தமிழகம்

காற்றின் திசைவேக மாறுபாடு; அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக , அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

இடையப்பட்டி (மதுரை ) 7 செ.மீ., காரியாபட்டி (விருதுநகர் ) 6 செ.மீ., விரகனுர் அணை (மதுரை ), மானாமதுரை (சிவகங்கை ), பேரையூர் (மதுரை ) தலா 5 செ.மீ., திருபுவனம் (சிவகங்கை ), தல்லாகுளம் (மதுரை ), பிளவக்கல் (விருதுநகர் ), காயல்பட்டினம் (தூத்துக்குடி ), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி ), சோழவந்தான் (மதுரை ) தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT