தமிழகம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் 

செய்திப்பிரிவு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை மழை பெய்யும்.

திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும்.

அடுத்த 48 (07.11.2020) மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர், நீலகிரி, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய மாவட்டங்கள், புதுவையின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 72 (08.11.2020) மணி நேரத்தில் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி 12 செ.மீ., கிண்ணக்கொரை, கெட்டி தலா 10 செ.மீ., சாம்ராஜ் எஸ்டேட் 9 செ.மீ., குந்தா பாலம், குன்னூர், பர்லியாறு, திருச்சுழி (விருதுநகர்), பரமக்குடி (ராமநாதபுரம் ) தலா 7 செ.மீ., சுராலகோடு (கன்னியாகுமாரி ), தூத்துக்குடி, ராசிபுரம் ( நாமக்கல் ) தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT