தமிழகம்

வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவதே நல்லது; அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

செய்திப்பிரிவு

கரோனா இரண்டாவது அலை பரவல் நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என உணர்த்தியுள்ளோம். பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவது அவர்கள் கட்சிக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நவ.6 முதல் டிச.6 வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரையைத் தடைசெய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், பாஜக சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

''தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கை, களப்பணிகள் காரணமாக உச்சி முதல் அடிமட்டம் வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் வரை கரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். ஆனால், இரண்டாவது அலை, மூன்றாவது அலையையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. அதனால் பொதுமக்களைக் காக்க வேண்டியது யார்? அரசாங்கத்தின் கடமையல்லவா? அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு பொதுமக்களின் உயிரைக் காக்கும் தலையாயக் கடமை.

அந்தக் கடமையை உணர்ந்துதான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என உணர்த்தியுள்ளோம். அதனால்தான் தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அவர்கள் உணர்ந்து பொதுமக்களுக்காக, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவது அவர்கள் கட்சிக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. தடை என்பதை அரசு அவர்களுக்குத் தெரிவித்துவிடும்.

அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் ஆக்ட் உள்ளது. சட்டமில்லாமல் நாடு இல்லை. சட்டம் உள்ள நாட்டில் நாம் அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் உண்மையில் ஜனநாயகப் பண்பு. ஜனநாயகத்துக்கு உற்றவர்கள் என்று சொல்ல முடியும்.

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இது பாஜகவுக்கு மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாகச் சட்டத்தை மதிக்க வேண்டும். அது எல்லோருக்கும் அழகு. இதைத் தனி மனிதனாக நான் வலியுறுத்துகிறேன்.

ஏழு பேர் விடுதலை வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஒரு தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். தற்போது உச்ச நீதிமன்றம் அதில் கருத்துத் தெரிவித்துள்ளது. கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆளுநர் உச்ச நீதிமன்றக் கருத்தைக் கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT