தமிழகம்

அம்பை ஆற்றுமணல் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

அம்பை ஆற்றுமணல் கடத்தல் வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன்? என்பது தொடர்பாக அம்பை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அம்பையைச் சேர்ந்த கிறிஸ்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அம்பையில் எம்- சாண்ட் பெயரில் ஆற்று மணல் எடுத்து கேரளாவுக்கு விற்பனை செய்தது தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு ரூ.9.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மணல் விற்பனையில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே மணல் திருட்டு வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? முக்கிய குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்படவில்லை? அவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள்? என்பது தொடர்பாக அம்பை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ. 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT