தமிழகம்

ராமேசுவரம் கடலில் தோன்றிய சுழல்காற்று: கடல் நீரை உறிஞ்சியது

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம் அருகே வேதாளை கடற்பகுதியில் இன்று காலை சூழல் காற்று தோன்றி மறைந்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே வேதாளை கடலில் புதன்கிழமை காலை 10 மணியளவில் கடலில் கரும்மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் சுழல் காற்று சிறிது நேரம் தோன்றி மறைந்ததாக நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுகிறது.

பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது சூழல் ஏற்படுவதும், மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது சூழல் மறைந்து விடும். இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.

கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் , கடலில் பயணம் மேற்கொள்பவர்கள், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு, என்றனர்.

SCROLL FOR NEXT