தமிழகம்

சமூக இடைவெளியின்றி கடைவீதிகளில் திரளும் மக்கள் கூட்டம்: கோவையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்?

செய்திப்பிரிவு

தீபாவளிக்குப் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் திரளுவதால், கோவையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 14-ந் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள், பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பண்டிகை காலங்களில் மக்கள் முன்எச்சரிக்கையோடு வெளியில் செல்லவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணியவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தொற்று பரவல் குறைந்துவருகிறது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடைவீதிகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

ஆனால், கடைவீதியில் மக்கள் அதிகளவில் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ‘‘பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து நடமாடும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். ஜவுளி நிறுவனங்கள் உள்பட வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். மாநகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ரூ.3 லட்சம் அபராதம்

இந்நிலையில், பெரியகடைவீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது ஒரு துணிக் கடையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கை விடுத்து, மீண்டும் அதே விதிமீறலில் ஈடுபட்டதால், அந்த துணிக்கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஆணையர் உத்தரவிட்டார். அதேபோல, பெரிய கடைவீதியின் மற்றொரு பகுதியில் செயல்பட்டுவந்த துணிக் கடைக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

          
SCROLL FOR NEXT