கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள் நவம்பர் 1-ம் தேதி. 64 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்காகப் பாடுபட்ட மார்ஷல் நேசமணி, அப்பகுதி மக்களை நினைவுகூர்வோம் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை
''கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள் நவம்பர் 1-ம் தேதி. இந்தச் சிறப்புமிக்க நாளை இன்றளவும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை வென்று காட்டியவர் அனைவராலும் “குமரியின் தந்தை” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட, தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த, தமிழகத்தின் பூர்வீகப் பகுதியான, பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, தேவிக்குளம் ஆகியவை இருந்தன. இப்பகுதி மக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் சில ஆதிக்க சக்தியின் அடக்குமுறையால் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று விரும்பினர். இவர்களின் நிலையறிந்து தியாகி மார்ஷல் நேசமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுக்காக்கள், செங்கோட்டையில் பாதி தாலுக்கா தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இதுவே இன்று தமிழகத்தின் எல்லையாக வரலாற்றில் சிறந்து விளங்குகிறது.
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து, நவம்பர் மாதம் 1 தேதி அன்று 64 வருடம் ஆகிறது. இந்தப் பொன்னான நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்குக் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியின் தியாகத்தையும், உழைப்பையும் நினைவுகூர்வோம்.
அவரின் தியாகத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் இம்மாவட்டத்தை வளமிக்க சிறந்த மாவட்டமாக உருவாக்குவோம் என இந்நன்னாளில் அனைவரும் சபதமேற்போம். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்''.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.