ஊழல் ஒழிப்பு கருத்தரங்கில் பேசுகிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன். படம்: ஆர்.அசோக். 
தமிழகம்

ஆன்லைன் பரிவர்த்தனை ஊழலைக் குறைக்கும்: ஊழல் ஒழிப்புக் கருத்தரங்கில் தகவல்

கி.மகாராஜன்

ஆன்லைன் பரிவர்த்தனையால் ஊழல் குறையும் என ஊழல் ஒழிப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர்களுக்கான ஊழல் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதுநிலை கோட்ட மேலாளர் என்.ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் பேசுகையில், கரோனா காலத்தில் பலர் வீடுகளில் பணிபுரிவதால் ஆன்லைன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

விமானம், ரயில், பேருந்து முன்பதி, ஓட்டல் முன்பதிவு, காப்பீட்டு பணம் செலுத்துவது ஆகியன ஆன்லைன் வழியாக அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை ஊழலை குறைக்கிறது.

இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பான வழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். காப்பீடு நிறுவனங்கள் ஆன்லைன் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கச் செயலர் செல்வம், ஊழல் தடுப்புத்துறை கண்காணிப்பாளர் சிவகுமார், நிர்வாக அதிகாரி தனலெட்சுமி, மூத்த முகவர்கள் சுரேஷ் விஸ்வர், சங்கர நாராயணன், ரெங்கநாதன், விவேகானந்தம், தங்கம், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT