7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு நீண்ட தாமதத்திற்குப் பிறகு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தேவையற்ற பதற்றமும், தவிப்பும் ஏற்பட்டிருக்காது. 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு கடந்த மாதமே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இந்நேரம் தொடங்கியிருக்கும்.
7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்துக் கேட்டுக் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு 29.10.2020 அன்று பதில் வந்ததையடுத்து ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
7.5% இட ஒதுக்கீடு குறித்த சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுநர் நினைத்திருந்தால், அதை ஒரு சில நாட்களில் நடத்தி முடித்திருக்கலாம். 46 நாட்கள் தாமதப்படுத்தியிருக்கத் தேவையில்லை. மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கரோனா அச்சம் காரணமாக ஏற்கெனவே தாமதம் ஆகி வந்த நிலையில், சூழலை உணர்ந்தும், மக்களின் மன ஓட்டத்தை அறிந்தும் ஆளுநர் விரைவாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.
7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான். பாமகவின் தொடர் அழுத்தத்திற்குப் பிறகே இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கின.
நிறைவாக, கால தாமதம் ஆனாலும் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் பாமக மிகுந்த மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.
7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாகத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.