7.5. சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஏற்கெனவே வரவேற்றுள்ளது. தற்போது 7.5. சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
ஒரு வாரத்திற்கு முன் 4 வார அவகாசம் கோரிய ஆளுநர், இன்று, தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதே உண்மையில் ஆளுநருடைய நோக்கமாக இருந்திருக்கும். அது தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் வழக்கமாக எதிர்நிலை எடுக்கும் பாஜகவால் கூட எதிர்த்துச் சொல்ல முடியாத அரசியல் சூழல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, நேற்றைய தினம் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்திய பின்னணியில்தான் இந்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர் உடனடியாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருந்தால், நீண்ட கால தாமதத்தையும், மருத்துவக் கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் மன உளைச்சலையும் தவிர்த்திருக்க முடியும்.
வரும் காலத்திலாவது ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் அதிகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
அதேசமயம் இன்று வரையிலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கான விலக்குப் பெறுவதற்கான அவசியம் உள்ளது. மத்திய அரசு பறித்துக்கொள்ளும் மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழகக் கட்சிகளும், மக்களும் அதைத் தொடர்ந்து போராடி வெல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.