இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (இடது) ; தாக்கப்பட்ட மீனவர் சுரேஷ் (வலது) 
தமிழகம்

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்பதா?-இலங்கை அமைச்சருக்கு ராமேசுவரம் மீனவர்கள் கடும் கண்டனம்

எஸ்.முஹம்மது ராஃபி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் சந்தோஷம் அடைவதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதற்கு ராமேசுவரம் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் தலைமன்னார் அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார்.

இந்நிலையி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்திக் காயப்படுத்திய சம்பவம் சந்தோஷம் அளிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது பாராட்டைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சார்பாக கருத்து தெரிவித்த மீனவப் பிரதிநிதி சேசு பெர்னாண்டோ, "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக சொல்கிறார்கள். மத்திய அரசு கச்சத்தீவை மீண்டும் மீட்டுத் தந்தால் எல்லை தாண்ட மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்.

மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அல்லது கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்" என்றார்.

SCROLL FOR NEXT