வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 10 பேரிடர் குழுக்களுக்கான உபகரணங்களை சென்னை காவல் ஆணையர் குழுக்களிடம் வழங்கினார்.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''காவல் துறை பேரிடர் மீட்புக் குழு- சென்னை பொதுமக்களை மழைக் கால விபத்துகளிலிருந்து பாதுகாக்க, பாதுகாப்பு ஆயத்த உபகரணங்களைக் காவல் ஆணையாளர் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வழங்கி சென்னை காவல் மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 10 பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உதவி ஆய்வாளர் தலைமையில் ஆயுதப்படைக் காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நீச்சல், வெள்ள நிவாரணப் பணிகளில் அனுபவம் உள்ள காவலர்கள் உள்ளனர். மேலும் அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் சிறப்பு பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இன்று (29.10.2020) காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பார்வையிட்டு உபகரணங்களை வழங்கி சென்னை காவல் மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் ஏ.அமல்ராஜ், (தலைமையிடம்) ஆயுதப்படை துணை ஆணையாளர் சௌந்தர்ராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்”.
இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.