தமிழகம்

இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தியே தீரவேண்டும்: உயர் நீதிமன்றத்தில் யுஜிசி பதில் 

செய்திப்பிரிவு

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது. நடத்தியே தீரவேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி பல்கலைக்கழக மானியக் குழு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

இறுதிப் பருவ அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்குகளில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், அதன் சார்புச் செயலாளர் உமாகாந்த் பலுனி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இறுதிப் பருவத் தேர்வுகளை ஆன்லைன் அல்லது தனிமனித விலகல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாகவும் தேர்வு நடத்த அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது எனவும், தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கக் கோரலாம் எனவும் தெரிவித்துள்ளது” என பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT