தமிழகம்

குருபூஜைகளுக்கு செல்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை

கி.மகாராஜன்

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த காமாட்சி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் கார்க்கி (37) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

அவரது பாட்டி பூவு(எ) பூவம்மாள் (72) உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். எனது கணவரை அவர் தான் வளர்த்தார். இதனால் பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கணவருக்கு 3 நாள் பரோல் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே வழக்கில் கைதான கார்க்கியின் உறவினர்கள் முத்துராஜா, அன்பு ஆகியோருக்கும் பரோல் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தற்போது போலீஸார் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் பரோல் வழங்கினால் கைதிகளுக்கு பாதுகாப்பு இருக்காது.

போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது. போலீஸாரின் நிலை ஆதரவற்றவர்கள் போல் உள்ளது. குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சியினர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றனர்.

பின்னர் 3 பேருக்கு பரோல் கேட்டு தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT