ஜெயலட்சுமி: கோப்புப்படம் 
தமிழகம்

குமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டி.செல்வகுமார்

கடலூர் மாவட்டம், குமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், கடலூர் மாவட்டம், குமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜெயலட்சுமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமியைவிட 1,034 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

ஆனால், சில மணி நேரங்களில், விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து ஜெயலட்சுமியும், தன்னைப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி விஜயலட்சுமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சின்னம் ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி ஏற்பட்டதால், இத்தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (அக். 28) இவ்வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பு:

"இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சின்னம் ஒதுக்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவது போல உள்ளது.

எனவே, ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும். தன்னைப் பதவி ஏற்க அனுமதிக்கக் கோரி விஜயலட்சுமி தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது".

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT