தமிழகம்

தீபாவளியால் புத்துயிர் பெற்ற செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு

இ.ஜெகநாதன்

கரோனாவால் முடங்கியிருந்த செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்புப் பணி தீபாவளியால் புத்துயிர் பெற்றது.

இந்தியாவிலேயே பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுவது செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை தான். இதனை இளம்பெண்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர்.

சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடுகள் (அ) கட்டங்கள் (செக்டு) நிறைந்த அவற்றின் டிசைனும் சிறப்பு தான். இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடி, கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியாக நெசவு செய்து வருகின்றனர்.

செட்டிநாட்டு சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுரம், மயில், அன்னம், போன்ற பராம்பரியமான டிசைன்களே அதிகள் இருக்கும்.

மேலும் இந்த சேலைகளில் டபுள் சைட் பார்டர் இருக்கும். அத்தோடு வேறு எந்த சேலையிலும் இல்லாத 48 இஞ்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் இருக்கும். சமீபகாலமாக சிங்கிள் சைட் பார்டர் சேலைகளும் தயாரிக்கின்றனர்.

பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ‘ஷட்டில் நெசவு’ முறையில் கைத்தறியாக நெசவு செய்கின்றனர். இங்கு தயாராகும் சேலைகள் பெங்களூரு, புதுடில்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். கரோனாவால் காட்டான் சேலைகள் தயாரிப்புப் பணி முடங்கியது. ஏற்கெனவே தயாரித்த சேலைகளையும் விற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில், தீபாவளியையொட்டி இந்தியா முழுவதில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் இரவு, பகலாக சேலை தயாரிக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கானாடுகாத்தான் நெசவாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: செட்டிநாட்டு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு 60-க்கு 60 அளவுள்ள பருத்தி நூலையே பயன்படுத்துகிறோம். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களை பயன்படுத்துகிறோம். இதனால் டபுள் ஷேடு கிடைக்கிறது. புடவையும் பளிச்சென்று காண்போரைக் கவர்ந்திழுக்கும். ஆண்டாண்டிற்கும் சாயம் போகாது, என்று கூறினார்.

SCROLL FOR NEXT