தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து. 
தமிழகம்

தமிழில் அனுப்பிய மனுவைத் திருப்பி அனுப்புவதா? - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேமுதிக முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

க.ரமேஷ்

மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தமிழில் எழுதிய மனு, திருப்பி அனுப்பப்பட்டதற்கு பண்ருட்டி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் செம்மங்குப்பத்தில் சைமா சாயப் பட்டறை சட்டத்திற்கு விரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பண்ருட்டி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து ஒரு மனு அளித்தார். மேலும், அவர் இது குறித்து ஒரு மனுவைத் தமிழில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திற்கு அனுப்பினார்.

இந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்துவுக்கு கடந்த 16-ம் தேதியிட்டு ஒரு கடிதம் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மனுவை எழுதி அனுப்புமாறு கூறி தமிழில் எழுதப்பட்டிருந்த மனுவையும் திருப்பி அனுப்பி இருந்தனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறை, மொழிப் பாகுபாட்டைக் காரணம் காட்டி அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மொழிகளில் தமிழ் ஒன்றாக இருக்கும்போது தமிழில் எழுதிய புகாரைத் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து கூறுகையில், "நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கும், பிரச்சினை குறித்துத் தமிழில் பேசவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், தமிழில் அனுப்பிய மனு, பாகுபாடு காட்டி திருப்பப்படுவது தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அவமானப்படுத்தி கோரிக்கைகளை நீர்த்துப் போகச்செய்யும் சதித் திட்டம். திருப்பி அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெற்று இதற்குக் காரணமான துறை அதிகாரிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT