சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து திக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து திக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவவாதிகளின் போக்கு அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி உண்டதாக வதந்தி பரவினாலே அவரைக் கொலை செய்யும் அளவுக்கு செல்கிறார்கள். இங்கே கவுரவக் கொலைகள் கூச்சமின்றி நடக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முனைகிறது. எதை உண்ண வேண்டும், எதை எண்ண வேண்டும் என்பதைக் கூட மற்றவர்கள் முடிவு செய்கிற அளவுக்குத்தான் இன்றைய நிலைமை உள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். தலித்களுக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமைகள் 2014-ம் ஆண்டில் நடந்துள்ளன. மேலும் 2 ஆயிரத்து 233 தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுகண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.