'அன்பான ஆவடி குரூப்' காவலர்கள் சார்பில் உடல் நலம் பாதிக்கப்பட்டு விருப்பு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த 7.11.1988 இல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்த 310 காவலர்களை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் 'அன்பான ஆவடி குரூப்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்தார். அதில் சுமார் 140 காவல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்களுடன் பயிற்சி முடித்த காவலர்களில் மஹபூப் ஜான் கடலூரில் உதவி ஆய்வாளராக இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத காரணத்தினால் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார்.
அவருக்கு ஓய்வூதியமும் கிடைக்காத நிலையில் மருத்துவச் செலவுக்கும், வாடகை வீட்டில் இருப்பதால், வாடகை, குடும்பச் செலவு மற்றும் குழந்தைகள் படிப்பு ஆகிய செலவுகளுக்குப் பணமில்லாமல் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார்.
இதை அறிந்த 'அன்பான ஆவடி குரூப்' ஒருங்கிணைப்பாளர் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் முயற்சியில் அந்த குரூப்பில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தி ரூ.1 லட்சத்து பத்தாயிரம் நிதி உதவி பெற்று அதனை நேற்று (அக். 25) கடலூர் மஞ்சக்குப்பம் சப்தகரி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மஹபூப் ஜானிடம் உதவி ஆய்வாளர்கள் மயிலாடுதுறை சிவக்குமார், கடலூர் சாமிநாதன், ரவீந்திரன், தாயுமானவன், திருவாரூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி நலம் விசாரித்தனர்.