தமிழகம்

காவேரி மருத்துவமனை சென்றார் முதல்வர் பழனிசாமி: அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் விசாரிப்பு

செய்திப்பிரிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவைக்காண முதல்வர் பழனிசாமி நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உடன் வந்தனர்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரைக்கண்டு துக்கம் விசாரிக்க சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரைக் காண முதல்வர் பழனிசாமி மதியம் 3-15 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உடன் வந்தனர். மருத்துவமனைக்கு வந்த முதல்வர் பழனிசாமி துரைக்கண்ணுவின் உறவினர்களிடம் அமைச்சரின் உடல் நிலைக்குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சருக்கு அளிக்கப்படும் எக்மோ சிகிச்சை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

மருத்துவக்குழுவினரிடம் அமைச்சரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT