போலீஸார் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு ரூ.34.68 லட்சம் மருத்துவம் மற்றும் கல்விஉதவித் தொகையை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று வழங்கினார்.
சென்னை பெருநகரில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உயர்மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு செலவழித்த பணம், தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சமீபத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று, சேமநல நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்த 19 காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.28 லட்சத்து 69 ஆயிரத்து 042-க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் பணியின்போது இறந்த 42 போலீஸாரின் வாரிசுகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளிப் படிப்புக்காக ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. நேற்று வழங்கப்பட்ட மருத்துவ உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை மொத்தம் ரூ.34 லட்சத்து 68 ஆயிரத்து 742 ஆகும்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர்கள் ஏ.அமல்ராஜ் (தலைமையிடம்), ஆர்.தினகரன் (தெற்கு), ஏ.அருண் (வடக்கு), என்.கண்ணன் (போக்குவரத்து), இணை ஆணையர் எஸ்.மல்லிகா (தலைமையிடம்), துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்), எஸ்.விமலா (நுண்ணறிவுப் பிரிவு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.