ரயில்வே நிர்வாகம் தனியார்மயமாவதை கண்டித்தும், விரைந்து போனஸ் வழங்க வலியுறுத்தியும் எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் தாம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரயில்வே தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், கேங் மேன்களுக்கு போக்குவரத்துப்படி ரத்து செய்வதை கைவிடவேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள், நேற்று தாம்பரத்தில் சென்னை கோட்ட உதவிச் செயலர் எம்.தயாளன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோட்டப் பொருளாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். உதவிச் செயலர் பன்னீர்செல்வம், தாம்பரம் கிளை நிர்வாகிகள் ஏ.பார்த்திபன், திருநாவுக்கரசு, சி.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், கரோனா ஊரடங்கை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காமல் இருக்கக் கூடாது. இல்லையெனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.