தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக் கடையில் கடந்த 18-ம் தேதி கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத் தொடர்ந்து, அந்த துணிக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறுஅதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்காதது தெரியவந்ததை அடுத்து, அந்தக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "இந்தநடவடிக்கை வணிக நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும். வரும் காலம் விழாக்காலம் என்பதால், மாநகரம் முழுவதும் உள்ள துணிக் கடைகள், வணிகவளாகங்களுடனான கூட்டம்நடத்தி, மீண்டும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறோம்"என்றனர்.