புதுச்சேரியில் இன்று புதிதாக 206 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 86.02 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (அக். 20) கூறும்போது, "புதுச்சேரியில் இன்று 4,013 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-143, காரைக்கால்-29, ஏனாம்-18, மாஹே-16 என மொத்தம் 206 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 577 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 33 ஆயிரத்து 452 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள், 1,521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 2,579 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,100 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 252 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 774 (86.02 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்து 189 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 824 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.