ஓய்வூதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச் சங்கங்களின் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. உண்ணாவிரதத்தை போக்குவரத்துத் துறை முன்னாள் நிர்வாக இயக்குநர் எல்.ஜி.சிங்காரவேலன் தொடங்கிவைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
ஓய்வு பெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதிய சீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 2010 செப்டம்பருக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு 15 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்கியதுபோல, அதற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்.
18 மாத அகவிலைப்படி நிலு வையை உடனே வழங்க வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.