தமிழகம்

விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரப்பர் இறக்குமதியை தடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் ரப்பர் இறக்குமதியைத் தடுக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்று ரப்பர் சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ரப்பர் உற்பத்திக்கான தட்பவெட்பம் குமரி மாவட்டத்தில் மட்டுமே அமைந்துள்ளது. இம்மாவட்ட த்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளை உள்ளடக்கிய கல்குளம், விளவங் கோடு மற்றும் தோவாளை ஆகிய வட்டங்களில் ரப்பர் விவசாயம் பெருமளவில் மேற்கொள்ளப் படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தமிழக அரசின் நிறுவனமான ரப்பர் கழகம் உள்ளது. தற்போது ரப்பர் கழகத்தில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாகவும், 1,000 தொழிலாளர்கள் தற்காலிக தொழிலாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர். கீரிப்பாறை மற்றும் மைலாறு பகுதிகளில் இரண்டு பெரிய ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

3 ஆயிரம் டன் உற்பத்தி

குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு உற்பத்தியாகும் 3 ஆயிரம் டன் ரப்பரை நாட்டிலுள்ள பல்வேறு தனியார் ரப்பர் ஆலைகள் கொள்முதல் செய்து வருகின்றன. தற்போது ரப்பர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் ரப்பர் இறக்குமதி அதிகரிப்பால் ரப்பர் விவசாயிகள் மேலும் பாதிப்படைந்துள்ளனர்.

விலை வீழ்ச்சி

இது குறித்து குமரி மாவட்ட சிஜடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம். வல்சகுமார் கூறியதாவது: கடந்த 2011-ம் ஆண்டு ஒரு கிலோ ரப்பர் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரப்பர் ரூ. 91-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப டயர் விலை குறைக்கப்படவில்லை.

ரப்பர் விலை வீழ்ச்சிக்கு வெளிநாடுகளிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்வதுதான் முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் ஆண்டொன் றுக்கு 10 லட்சம் டன் ரப்பர் தேவைப்படுகிறது. கடந்த 2013-2014-ம் ஆண்டு நாட்டில் ஏழரை லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. 2014-2015-ம் ஆண்டில் ஆறரை லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. இதே ஆண்டில் மத்திய அரசு நான்கரை லட்சம் டன் ரப்பரை இறக்குமதி செய்தது. தேவைக்கும் அதிகமாக ரப்பரை இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் ரப்பரின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் ரப்பரை நம்பியுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ரப்பர் இறக்குமதியை தடுப்பதற்கு மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். தமிழக அரசு ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு கிலோ ரப்பருக்கு ரூ. 200 நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு கனரக ரப்பர் ஆலையை விரைந்து குமரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும். பரளியாறில் செயல்பட்டு வரும் ரப்பர் வாரியத்தின் ரப்பர் ஆராய்ச்சி மையத்துக்கு மேலும் 100 ஏக்கர் நிலம் வழங்கி அந்த ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு எம்.வல்சகுமார் கூறினார்.

          
SCROLL FOR NEXT