வங்கிப் பணிகளில் பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைக் கண்டித்து நாளை, மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:
"முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைப் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு.
வங்கித்துறையில் நடந்திருக்கும் இந்த மோசடியை விசிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதி காலை 11.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கான இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் ஆங்காங்கே பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பொதுத்துறை வங்கிகளுக்கான அதிகாரிகள் தேர்வில் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டிலிருந்து 6 சதவீதத்தையும்; எஸ்.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 2 சதவீதத்தையும்; எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 1.5 சதவீதத்தையும் பறித்து அதனை பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
பொதுவில் 50 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டு, நலிவடைந்தோரின் இட ஒதுக்கீட்டில் கை வைத்திருப்பது திட்டமிட்ட சதியே ஆகும். இது மோடிஅரசின் சமூகநீதிக்கு எதிரான செயல்திட்டங்களுள் ஒன்றாகும். இவ்வாறு படிப்படியாக இடஒதுக்கீட்டு முறையையே இல்லாமலாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.
பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி இன்னும் எந்தெந்த துறைகளில் இப்படி இட ஒதுக்கீடு அரவமில்லாமல் பறிக்கப்பட்டதோ தெரியவில்லை. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை வெளிப்படையாக அறிவித்துப் பறிக்கத் துணிந்திருக்கும் மோடி அரசைக் கண்டித்துப் போராட வேண்டியது சமூகநீதிக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவருக்குமான கடமையாகும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இந்நேரத்தில் ஒருங்கிணைந்து இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்கத் தவறினால், இத்தனைக் காலமாகப் போராடிப் பெற்ற சமூகநீதியை முற்றாகப் பறிக்க சனாதன சக்திகள் தயங்கமாட்டார்கள். எனவே, கொஞ்சமும் தாமதிக்காமல் இந்த அநீதியை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.