தமிழகம்

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் வழக்கு: இளைஞரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கி.மகாராஜன்

ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கட்டூரணியைச் சேர்ந்த பாண்டிசெல்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகன் கனகபாண்டியனுக்கு 2018-ல் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததால் அடிக்கடி தகராறு நடந்தது. இதனால் பெண் வீட்டினர் என் மகனை அடிக்கடி மிரட்டி வந்தனர்.

இதனால் இருவரையும் வ.உ.சி.நகருக்கு தனிக்குடித்தனம் அனுப்பினேன்.

அங்கு செல்லும் போதெல்லாம் கனகபாண்டியன் தூங்கிக்கொண்டே இருந்தார். தனது மனைவி அடிக்கடி தூக்க மாத்திரைகளை தருவதாக தெரிவித்தார். மருமகளும் மாத்திரைகளை சாப்பிட்டு கருவை கலைத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் என் மகன் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில் மார்ச் 4-ல் சக்கரைக்கோட்டை ரயில் தண்டவாளத்தின் என் மகனின் உடல் கிடந்தது. ரயில்வே போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

என் மகன் மரணம் இயற்கையானது அல்ல. மர்மம் உள்ளது. அவன் வீட்டில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கவில்லை. எனவே என் மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரர் மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT