மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா. உடன், அவரது தந்தை பெரியசாமி. 
தமிழகம்

துணை தலைவர் திட்டியதாக கூறி பெண் ஊராட்சித் தலைவர் தர்ணா: நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவர்பிரியா பெரியசாமி(23). கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், துணைத் தலைவர்மீது குற்றம்சாட்டி நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில், தன் தந்தை பெரியசாமியுடன் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலக தளவாட பொருட்கள் வாங்கப்பட்டன. அதில் ஊராட்சித் தலைவருக்கு ரோலிங் சேர் புதிதாக வாங்கப்பட்டது. அதில் என்னை அமர விடாமல் ஊராட்சி துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, சாதாரண நாற்காலியில் தான் அமர வேண்டும். இந்த சேரில் அமர உனக்கு என்ன தகுதி இருக்கு என்று ஜாதியை குறிப்பிட்டு தகராறு செய்தனர்.

ஊராட்சியில் நடைபெறும் பராமரிப்பு வேலைகளுக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே பில்லில் கையெழுத்துப் போடுவேன் என்று கூறி துணைத் தலைவர் எந்த பில்லிலும் கையெழுத்து போடவில்லை. இதனால் ஊராட்சி வேலைகள் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து கடந்த 6-ம் தேதி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு கொடுத்தும் ஆணையர் சரவணன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தே தர்ணாவில் ஈடுபட்டேன் என்றார்.

பின்னர், மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு சென்ற அவர், மன்னம்பந்தல் ஊராட்சி துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

SCROLL FOR NEXT