கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட தனியார் தேஜஸ் ரயில்களின் சேவை வரும் 17-ம் தேதிமுதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதில், பயணிகளுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, ‘‘நாட்டில் பல்வேறு இடங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது. இதேபோல், கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியார் தேஜஸ் ரயில்கள் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. மத்திய அரசின்வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படும்.
ரயிலில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், ஒருஇருக்கை இடைவெளி விட்டுபயணிகள் அமர வைக்கப்படுவார்கள். பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை நடத்தப்படும். மேலும், பயணிகளுக்கு தற்காலிகமாக உணவுகளை இலவசமாக வழங்கவுள்ளோம்’’என்றனர்.