விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் நகரும் அம்மா நியாயவிலைக் கடையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வழங்க ரூ.9.66 கோடியில், 3501 நகரும் நியாய விலை கடைகள் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 21 ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 49 கூட்டுறவு நிறுவனங்கள் 36 வாகனங்கள் மூலம் 60 இடங்களில் அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டத்தின் மூலம் 7999 பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.
இந்த வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது முதல் விற்பனையையும் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து முதல்வர் வருகையையொட்டி விழா ஏற்பாடுகள் குறித்து மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.