காஞ்சிபுரம் மாவட்டம் புதுக்குப்பம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் புதுக்குப்பம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிப்புக்குள்ளாகி வருவதால் கடல் அரிப்பைத் தடுக்க நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைத்துத் தர அப்பகுதி மீனவர்கள் கோரினர்.
இதைத் தொடர்ந்து, 2020-21-ம் நிதியாண்டில் 110-வது விதியின் கீழ் முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமத்தில் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன்இறங்குதளங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தற்போது தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளது.
படகுகளை நிறுத்தலாம்
இத்திட்டம் நிறைவேற்றப்படுவதால் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமப் பகுதியில் கடல் அரிப்பு தடுக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும்இயலும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.