ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுகிறது. நேற்று காலை மலைப்பாதையில் புகை மண்டலம்போல பனி சூழ்ந்திருந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. படம் : எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் பயணிகள் மகிழ்ச்சி: பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்

செய்திப்பிரிவு

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் பனி மூட்டமும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று தடுப்பு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் பயணிகள் வருகைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை உள்ளது.

இந்நிலையில், ஏற்காட்டுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போதைய மழை காரணமாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.

ஏற்காட்டில் முக்கிய இடங்களான ரோஸ் கார்டன், பக்கோடா பாயின்ட், லேடீஸ் சீட், அண்ணாபூங்கா உள்ளிட்ட இடங்கள் பனிசூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இந்த இயற்கை சூழல் பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் எதிரெதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக இருப்பதால், வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

ஏற்காட்டுக்கு வரும் வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT