தமிழகம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாகவும், ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை ) வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

போளூர் (திருவண்ணாமலை) 12 செ.மீ., கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 11 செ.மீ., மாரண்டஹள்ளி (தருமபுரி) 7 செ.மீ., ஓசூர் (கிருஷ்ணகிரி ), உதகமண்டலம் தலா 6 செ.மீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி ), வைகை அணை (தேனி), குந்தா பாலம் (நீலகிரி ) தலா 5 செ.மீ.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 12-ம் தேதி வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையைக் கடக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 09 முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அக்டோபர் 11,12 வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT